செய்திகள்
திருப்பூரில் மளிகை-காய்கறி கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்
திருப்பூரில் மளிகை-காய்கறி கடைகளில் இன்று காலை பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.அதன்படி பகல் 12 மணி வரை செயல்பட்ட காய்கறி, மளிகை கடைகள் இன்று முதல் பகல் 10மணி வரை செயல்பட்டன. அதேப்போல் டீக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இந்தநிலையில் நாளை முழு ஊரடங்கு மற்றும் இன்று காலை 10மணி வரையே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மளிகை கடைகளிலும் பொதுமக்கள் திரண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் குவிந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மார்க்கெட்டுகள் அனைத்திலும் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், பொதுமக்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர். மேலும் பல்வேறு கடைகளில் பொதுமக்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.