செய்திகள்
இந்து முன்னணி நிர்வாகிக்கு செல்போனில் கொலை மிரட்டல்
திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு வழக்கில் கைதான சேக் என்பவர், உன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் நீ படுகொலை செய்யப்படுவாய் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குமார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போனில் பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போனில் பேசியது திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த முகமது ஆரீப்(21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் முகமது ஆரீப் காதலித்த பெண்ணை சேக் பிரித்து விட்டாராம். இதனால் அவரை பழிவாங்குவதற்காக இந்து முன்னணி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியது தெரியவந்தது. தொடர்ந்து முகமது ஆரீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.