முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ் - விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா. இவர் பதவியில் இருந்த போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து அவர் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பொன் கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை கமிஷன் பல்வேறு ஆவணங்களையும், வாக்குமூலங்களையும் ஆதாரமாக திரட்டியது. இந்தநிலையில் கடந்த மாதம் சூரப்பாவின் பதவி காலம் முடிவடைந்தது.
தன் மீதான விசாரணையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க தடை கோரியும் சூரப்பா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான விசாரணையை மேற்கொள்ளலாம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் விசாரணை ஆணைய நீதிபதி பொன் கலையரசன் சூரப்பாவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில், “உங்கள் மீதான குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உங்கள் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது? இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
விசாரணை ஓரளவு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்போது சூரப்பாவுக்கு நோட்டீசும் அனுப்பி இருப்பதால் இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.