செய்திகள்
வழிபாட்டு தலங்கள் மூடல்: கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை
முழுஊரடங்கை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை நடைபெற்றது.
கோவை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பக்தர்கள் இன்றி சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலி நடைபெற்றது. இதனால் கிறிஸ்தவ ஆலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். அது, ஆன்லைன் மூலம் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் இருந்தபடியே கலந்து கொண்டனர். நற்செய்தியும் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.
கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பாதிரியார் டேவிட் பர்னபாஸ் பிரார்த்தனை நடத்தினார். இது இணையதளத்தில் ஒளிப்பரப்பட்டது. இது போல் மசூதிகளும் மூடப்பட்டு இருந்தன. முஸ்லிம்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே தொழுகையில் ஈடுபட்டனர்.