செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்த வடமாநில தொழிலாளர்கள்.

திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்த வடமாநில தொழிலாளர்கள்

Published On 2021-04-25 22:35 GMT   |   Update On 2021-04-26 13:29 GMT
முழு ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு பல கிலோ மீட்டர் நடந்தே வந்தனர்.
அனுப்பர்பாளையம்:

நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில நாட்கள் தொடர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல்களும் பரவி வருகிறது.

முழு ஊரடங்கு அச்சம் காரணமாக திருப்பூரில் பணியாற்றி வரும் ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரெயில் மூலமாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் முழு ஊரடங்கான நேற்று திருப்பூர் மாநகர் முழுவதும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சாலைகளும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் முழு ஊரடங்கையும் பொருட்படுத்தாத வடமாநில இளைஞர்கள் பலர் நேற்று பஸ் போக்குவரத்து இல்லாததால் நடந்தே திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். 15 வேலம்பாளையம், வெங்கமேடு, ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், போயம்பாளையம், அனுப்பர்பாளையம் உள்பட திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் தங்களது உடைமைகளை தூக்கி கொண்டு நடந்து சென்றனர்.

ஒருசில இடங்களில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான வடமாநில இளைஞர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தை நோக்கி தங்களது நடையை கட்டினார்கள்.
Tags:    

Similar News