செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட மகேஷ்வரி மற்றும் அவருடைய மகன் அருண்ராயப்பன்.

அவினாசியில் சோக சம்பவம் : தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-22 23:19 GMT   |   Update On 2021-04-23 07:31 GMT
அவினாசியில் தாயும், மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
அவினாசி:

அவினாசியில் தாயும், மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். மகனுக்கு திருமணமாகாத விரக்தியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவினாசி வ.உ.சி. காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது 58). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி (50). இவர்களது மகன் அருண்ராயப்பன் (30). பி.காம்,, மற்றும் சி.ஏ.படித்திருந்தார்.. மேலும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அருண்ராயப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதற்கிடையில் மகேஷ்வரிக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லாததாலும், மகனுக்கும் இன்னும் திருமணமாகாததாலும், கடந்த சில நாட்களாக மகேஸ்வரி விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை ரங்கசாமி வீட்டிலிருந்து தொழில் தொடர்பாக வெளியே சென்றுவிட்டார். இதனால் அருண்ராயப்பனும், அவருடைய தாயாரும் வீட்டில் இருந்தனர். ஆனால் அருண்ராயப்பன் வேலைக்கு போகவில்லை. இதையடுத்து அவர் ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்பதற்காக அவர் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து அருண்ராயப்பனின் செல்போனுக்கு நீண்டநேரமாக தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவருடைய தாயார் மகேஷ்வரியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்னர். ஆனால் அவரும் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து அருண்ராயப்பனின் தந்தை ரங்கசாமியை செல்போனில் தொடர்பு கொண்ட பனியன் நிறுவனத்தினர், அருண்ராயப்பனும், அவருடைய தாயார் மகேஷ்வரியும் செல்போனை எடுக்காதது குறித்து தெரிவித்ததோடு, எனவே உடனே வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து ரங்கசாமி வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனித்தனி அறையில் மகேஷ்வரி சேலையில் தூக்குப்போட்டும், அருண்ராயப்பன் கயிற்றால் தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர்கள் இருவரின் உடல்களை பார்த்தும் ரங்கசாமி கதறி அழுதார். இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீசார் சம்பவம்நடந்த வீட்டிற்கு வந்து தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் மகனுக்கு இன்னும் திருமணமாகாததாலும், மகேஷ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததாலும், மன விரக்தியில் இருந்த மகேஷ்வரி தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அவினாசியில் தாய்- மகன் இருவரும் ஒரே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News