முத்துப்பேட்டை அருகே பீகார் தொழிலாளி கீழே விழுந்து பலி
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் அரசு நுகர்பொருள் வாணிப கழக நெல் குடோன் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இதில் பீகாரை சேர்ந்த சிலரும் வேலை பார்த்து வருகின்றனர். பீகார் மாநிலம் மோஜி ஜெயசிங்பூர் பகுதியை சேர்ந்த சுகல்மாஜி மகன் ரவீந்தர் என்கிற பத்திரமாஜி(35) என்ற தொழிலாளியும் அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவர் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு அவர் தங்கும் இடத்திற்கு சென்றபோது கல்லில் தடுமாறி கீழவிழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து அவரது சகோதரர் சம்பு மாஜி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர். பலியான பத்திரமாஜிக்கு இந்துதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.