ஆறுமுகநேரி விடுதியில் புரோக்கர் மர்ம மரணம்-போலீசார் விசாரணை
ஆறுமுகநேரி:
உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி அம்மன் புரத்தை சேர்ந்த முருகேசன் (வயது 42). இவர் கோயம்புத்தூரில் மளிகை கடைகளில் வேலை பார்க்க ஆட்களை அனுப்பும் புரோக்கர் தொழில் செய்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி இவர் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள ஒரு விடுதியில் வந்து தங்கி உள்ளார். நேற்று காலையில் டீ குடித்து விட்டு தனது அறைக்குள் சென்ற முருகேசன் மாலையில் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் ஜெயசிங் கதவை தட்டி உள்ளார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் ஊழியர்களுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முருகேசன் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயசிங் இது குறித்து ஆறுமுகநேரி போலீசிற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று முருகேசன் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச் செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசன் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.