செய்திகள்
கைது

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் கஞ்சா ஆயில் சிக்கியது- 2 பேர் கைது

Published On 2021-04-12 09:31 GMT   |   Update On 2021-04-12 09:31 GMT
தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாலத்தீவுக்கு அவை கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கூட்டம்புளி கிராமத்தை சேர்ந்தவர் நவஜீவன். இவருக்கு சொந்தமான விவசாய பண்ணை அப்பகுதியில் உள்ளது. அந்த பண்ணையில் இருந்து மாலத்தீவுக்கு கஞ்சா ஆயில் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 3 லிட்டர் கஞ்சா ஆயில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாலத்தீவுக்கு அவை கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த நாகல்குளம் பகுதியை சேர்ந்த பிரிட்டோ (வயது 37) , பண்ணைவிளையை சேர்ந்த விக்டர் (49) ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் பிரிட்டோ செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வசித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்து, போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட கஞ்சா ஆயிலின் மதிப்பு ரூ.45 லட்சம் மதிப்பு என கூறப்படுகிறது.

Tags:    

Similar News