செய்திகள்
வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது
பல்லடத்தில் நடந்து சென்ற வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில் நேற்று இரவு வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அதில் பீகாரை சேர்ந்த தர்மேந்திர யாதவ் (வயது 21) என்ற வாலிபர் செல்போன் பேசியபடியே சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. அதில் இருந்த நபர் திடீரென வாலிபரின் செல்போனை பறித்து சென்றான்.
செல்போனை பறிகொடுத்த வடமாநில வாலிபர் சத்தம் போட்டார். இதில் பயந்துபோன அவர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது அவர்களில் ஒருவன் தன்னிடம் வைத்திருந்த சிறிய கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (20), ஹரிகணேஷ் (20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன், கத்தி, மோட்டார்சைக்கிள், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.