செய்திகள்
திருச்சியில் ஓட்டல் அறையில் மருந்து நிறுவன அதிகாரி மர்ம மரணம்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஓட்டல் அறையில் மருந்து நிறுவன அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 48). இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் கோவையில் இருந்து ரெயிலில் திருச்சி வந்தார். திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். கிளை மேலாளரை சந்திப்பதற்காக ஓட்டலுக்கு வர கூறி இருந்தார். இதையடுத்து கிளை மேலாளர் நேற்று காலை ஓட்டலுக்கு வந்தார். அவர் சந்திரசேகர் தங்கி இருந்த அறையின் கதவை நீண்டநேரமாக தட்டியும் திறக்கவில்லை. உடனே இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கூறினார்.
சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அங்கு சந்திரசேகர் ஷோபாவில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் மர்மம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.