செய்திகள்
காங்கேயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
காங்கேயம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
காங்கேயம்:
காங்கேயம் அருகே உள்ள குருக்கலிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மனைவி கல்பனா (வயது 27). இவர் சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், அதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்பனா நேற்று மதியம் 2 மணியளவில் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காங்கேயம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி கல்பனா உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.