செய்திகள்
போலீசார் விசாரணை

வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை

Published On 2021-03-04 10:49 GMT   |   Update On 2021-03-04 10:49 GMT
செல்லதுரை கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த வேலூர் ரவுடி வசூர்ராஜாவை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 39). பிரபல ரவுடியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக 29 பேரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு கூலிப்படை தலைவனாக இருந்து செயல்பட்ட வேலூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசூர்ராஜா ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து வசூர்ராஜாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் வசூர்ராஜாவை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, ‘ரவுடி செல்லதுரையை கொலை செய்வதற்காக அவரது எதிர் கோஷ்டியினர் வேலூர் ரவுடி வசூர்ராஜாவை பல லட்சம் ரூபாய் கொடுத்து சேலத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் சம்பவத்தன்று காரில் வந்த செல்லதுரையை வழிமறித்து முதலில் வசூர்ராஜாவின் கூலிப்படையினர் அரிவாளால் வெட்டி உள்ளனர். அதைத்தொடர்ந்து சேலத்தை சேர்ந்த ரவுடிகள் வெட்டி உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News