செய்திகள்
பரமத்தி அருகே விபத்தில் சிக்கிய மினி லாரி, சரக்கு ஆட்டோவை படத்தில் காணலாம்.

பரமத்தி அருகே மினி லாரி-சரக்கு ஆட்டோ‌ மோதல்: டிரைவர் பலி - 3 பேர் படுகாயம்

Published On 2021-02-10 10:47 GMT   |   Update On 2021-02-10 10:47 GMT
பரமத்தி அருகே மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பரமத்திவேலூர்:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் முத்துபாண்டியன் (வயது 48). இவர் தற்போது கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள முருங்கப்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் தனது ஆட்டோவில் 2 மாடுகளை ஏற்றிக்கொண்டு, அதனை விற்பனை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் புதன்சந்தைக்கு வந்தார். இவருடன் கரூர் மாவட்டம் மூலிமங்கலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரிகளான ராமலிங்கம் (50), இவருடைய மகன் சக்திவேல் (26) ஆகிய 2 பேரும் உடன் வந்தனர். பின்னர் இவர்கள் புதன்சந்தையில் உள்ள மாட்டு சந்தையில் மாடுகளை விற்று விட்டு கரூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை சேலம்-கரூர் சாலையில் பரமத்தி அருகே தனியார் கல்லூரி பக்கமாக சென்றபோது சரக்கு ஆட்டோ திடீரென டிரைவர் முத்துபாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய சரக்கு ஆட்டோ தடுப்புச்சுவரை தாண்டி, எதிரே கரூரில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் டிரைவர் முத்துபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், மாட்டு வியாபாரிகளான ராமலிங்கம், சக்திவேல் மற்றும் காங்கேயம் பகுதியை சேர்ந்த மினி லாரி டிரைவரான பூபதி (27) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான முத்துபாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News