செய்திகள்
கோப்புபடம்

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2021-02-08 12:50 GMT   |   Update On 2021-02-08 12:50 GMT
தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அண்ணாநகர் 9-வது தெருவில் ஒரு லோடு ஆட்டோவில் சிலர் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்த உடன் லோடு ஆட்டோவையும், அரிசி மூட்டைகளையும் போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த லோடு ஆட்டோவில் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் தாளமுத்துநகர் பகுதியில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லோடு ஆட்டோவில் 40 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகள் இருந்தன. அதனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேஷன் அரிசி பட்டை தீட்டப்பட்டு கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 90 மூட்டையில் இருந்த சுமார் 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News