தருமபுரி அருகே தொட்டிலில் விளையாடிய போது புடவை கழுத்தை இறுக்கி சிறுமி பலி
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவருக்கு தமிழழகி என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பன்னீர்செல்வம் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தமிழழகி கூலி வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் வீட்டில் இருந்த அவரது மூத்த மகள் செல்வராணி (11) தனது தங்கைகளுடன் புடவையில் தொட்டில் கட்டி விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டிலில் கட்டியிருந்த புடவை அவரது கழுத்தை இறுகியதால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தாள்.
இதை கண்டு அவரது தங்கைகள் இருவரும் அலறிக்கொண்டு கூச்சல் போட்டனர். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது தொட்டிலில் தொங்கிய நிலையில் செல்வராணி இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தொப்பூர் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.