செய்திகள்
சஸ்பெண்டு

விழுப்புரத்தில் லஞ்ச வழக்கில் கைதான பெண் அதிகாரி சஸ்பெண்டு

Published On 2021-02-05 06:54 GMT   |   Update On 2021-02-05 06:54 GMT
விழுப்புரத்தில் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.

இங்கு தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் திருமண நிதி உதவி திடடத்தின் கீழ் தனது மகளுக்கு திருமண உதவி தொகை வேண்டி விண்ணப்பித்திருந்தார்.

திருமண உதவி தொகைக்கு ஒப்புதல் அளித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வதற்கு சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி ரூ.1500 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம் இதுகுறித்து லஞ்சம் ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமலிங்கம் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் சமூக நல பாதுகாப்பு அலுவலர், சென்னை சமூக நலத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஜெயலட்சுமியை சஸ்பெண்டு செய்து ஆணையர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News