செய்திகள்
தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் சங்கர், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் சர்வோத்தமன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்ட பணிகள் செயலாக்கத்தில் நெருக்கடி செய்வதை கைவிட வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது போடப்பட்ட 17-பி குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தோடு கோவை மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பணிமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சி துறையில், மாநில அளவில் அனைத்து நிலை பதவி உயர்வு ஆணைகளை உடனே வெளியிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளையும் வழங்கவேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியமர்த்தப்பட்ட கணினி உதவியாளர்கள், ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்கள் மற்றும் பொதுநிதியில் இருந்து ஊதியம் பெற்று வரும் கணினி உதவியாளர்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்யவேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.