செய்திகள்
கொள்ளை

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

Published On 2021-01-17 09:32 GMT   |   Update On 2021-01-17 09:32 GMT
பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு அன்னை நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் ராமதாஸ் (வயது 39). இவர் பெரம்பலூரில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட ராமதாஸ் தனது மனைவி கவுசல்யா, 2 குழந்தைகளுடன் அம்மாபாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை ராமதாஸ் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ராமதாசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ராமதாஸ் வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் ராமதாஸ் வீட்டின் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹாட் டிஸ்க்களையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து ராமதாஸ், பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு போன சம்பவம், அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News