கோவையில் விடுதியில் வெங்காய வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
கோவை:
தஞ்சாவூர் மாவட்டம் சீனிவாசபுரம் ராஜகோபால சுவாமி கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55). வெங்காய வியாபாரி. இவர் தனது தொழில் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.
இதுவரை ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கிய பணத்தை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கவே விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் ஒவ்வொரு ஊராக சென்று வந்த அவர் கடந்த 29-ந் தேதி கோவைக்கு வந்து ரெயில்நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
நேற்று இவரது அறை வெகுநேரமாக திறக்காமல் பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறைக்குள் கிருஷ்ணமூர்த்தி பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் விஸ்வதாஸ்(25). இவர் கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து பார்த்த போது விஸ்வதாஸ் வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.