செய்திகள்
விபத்து

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி

Published On 2021-01-09 06:53 GMT   |   Update On 2021-01-09 06:53 GMT
திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:

சங்கரன்கோவில் அருகே உள்ள நயினாகரத்தை சேர்ந்தவர் சண்முகையா (வயது 50). இவரது மகன் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

தைப்பூசத்தையொட்டி சண்முகையா திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து இருந்தார். நேற்று அவர் பாதயாத்திரையாக சங்கரன்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றார்.

இன்று அதிகாலை 3 மணிக்கு அழகியபாண்டியபுரம் இசக்கியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் 2 பேர் நடந்து சென்றனர்.

அப்போது சங்கரன் கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார் ஒன்று சண்முகையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகையா தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் அங்கு சண்முகையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News