செய்திகள்
கோப்புப்படம்

காரமடை அருகே பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2021-01-08 11:01 GMT   |   Update On 2021-01-08 11:01 GMT
காரமடை அருகே பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரமடை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 58).

இவர் நேற்று (வியாழக்கிழமை) கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் அருகே காரமடை காந்திநகர் கிராமத்தில் சம்பந்தி வீட்டுக்கு புறப்பட்டார். காந்திநகர் பஸ் நிலையத்தில் இறங்கி தனது சம்பந்தி வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர்.

அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி சுதாரித்துக்கொண்டு நகையை இறுக்கி பிடித்துக்கொண்டார். ஆனால் கொள்ளையர்கள் விடாமல் நகையை அறுத்தனர். 5 பவுன் நகையில் 4 பவுன் நகை கொள்ளையனிடமும், ஒரு பவுன் நகை விஜயலட்சுமியிடமும் சிக்கியது. இதனையடுத்து விஜயலட்சுமி அலறி சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் விஜயலட்சுமியிடம் நகை பறித்த காட்சி பதிவாகி இருந்தது. கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News