செய்திகள்
கைது

திருத்துறைப்பூண்டியில் பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் கைது

Published On 2021-01-05 09:53 GMT   |   Update On 2021-01-05 09:53 GMT
திருத்துறைப்பூண்டியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி தமிழரசி(வயது35). இவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு தனது வீட்டு வாசலில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் தமிழரசிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் தமிழரசி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நெடும்பலம் பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சங்கிலியை பறித்து கொண்டு வந்தவர்களை அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது பெரிய சிங்களாந்தி நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சாம்ராஜ்(22), அவரது சகோதரர் சஞ்சய்(21) மற்றும் அவரது நண்பர் பெரிய சங்கராந்தி தெற்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஆனந்தன்(20) ஆகியோர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுகன், தேவதாஸ் மற்றும் சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாங்குடி கடைத்தெரு அருகில் வேகமாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாம்ராஜ், சஞ்சய், ஆனந்தன் ஆகியோர் என்பதும், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News