செய்திகள்
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

பஞ்சாப் விவசாயிகள் மட்டுமே போராடுகிறார்கள் -சென்னை நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பேச்சு

Published On 2020-12-25 07:20 GMT   |   Update On 2020-12-25 07:20 GMT
சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெறும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றார்.
சென்னை:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று, பாஜக சார்பில் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

இதேபோல் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டுள்ளனர். சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி 
பிரகாஷ் ஜவடேகர்
 பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றார்.

‘புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடவில்லை. பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டும் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன் பெறுவது பஞ்சாப் விவசாயிகள்தான்.  வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தியுடன் பொதுவெளியில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றும் பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.
Tags:    

Similar News