செய்திகள்
முக்காணி தாமிரபரணி ஆற்றில் ஆண் பிணம்
முக்காணி தாமிரபரணி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் மிதந்துள்ளது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆறுமுகநேரி:
முக்காணி தாமிரபரணி ஆற்றில் நேற்று காலை 10 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் பழைய பாலத்திற்கு கீழ்புறம் தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முக்காணி கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் அந்தோணி, ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த ஆண் பிணத்தை ஆற்றிலிருந்து மீட்டனர்.
அந்த உடலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் கைப்பற்றி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் மொட்டையடித்த நிலையிலும், சிறிது தாடியுடனும் இருந்துள்ளார். மேலும் கட்டம் போட்ட சாரம், ப்ளூ கலர் சட்டையும் அணிந்திருந்தார். இவர் யார் என உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.