செய்திகள்
தற்கொலை

பிரியாணி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-17 02:58 GMT   |   Update On 2020-12-17 02:58 GMT
விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் பிரியாணி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர் சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் தங்கியிருந்து, வடபழனியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். அப்போது, அதேபகுதியில் திருமணமாகி, கணவனை பிரிந்து வாழும் 26 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மணிகண்டன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடமும் பேசியுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர், தனது மகள், மணிகண்டனை விட வயதில் மூத்தவளாக இருப்பதாகவும், மேலும் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பதால், மணிகண்டனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணிகண்டன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பிய அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News