செய்திகள்
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

Published On 2020-12-11 13:26 GMT   |   Update On 2020-12-11 13:26 GMT
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை பெற பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கோரி விண்ணப்பிக்கும், விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, கல்வி நிறுவனங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங் கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் வருகிற 31-ந்தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை மாணவ, மாணவிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News