செய்திகள்
கரூர் அருகே போலி நகைகளை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் மோசடி - 3 பேர் கைது
கரூர் காந்திகிராமத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் காந்திகிராமத்தில் தனியார் நகை அடகு கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் பசுபதிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 20), கவுதம்வினித் (27) ஆகியோர் சேர்ந்து, அடகு கடையில் 20 கிராம் எடை உடைய நகைகளை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த நகைகளின் உண்மை தன்மை குறித்து, அடகு கடையின் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த நகைகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதுகுறித்து அந்த அடகு கடையின் மேலாளர் சதீஷ்குமார் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாசில் (37) என்பவருக்கு சொந்தமான நகைகளை, பிரகாஷ், கவுதம்வினித் ஆகியோர் சேர்ந்து வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாசில், பிரகாஷ், கவுதம்வினித் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.