செய்திகள்
கோப்புப்படம்

அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர்

Published On 2020-12-10 09:23 GMT   |   Update On 2020-12-10 09:23 GMT
அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ- மாணவிகள் உதவித்தொகை பெற வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மாவட்ட ஸ்ரீவெங்கடபிரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும், விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் கால நிர்ணயத்துக்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-224475 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News