செய்திகள்
கோப்புபடம்

பெரம்பலூரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனத்தில் ரூ.7½ லட்சம் திருட்டு

Published On 2020-12-08 13:52 GMT   |   Update On 2020-12-08 13:52 GMT
பெரம்பலூரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.7½ லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 48). இவர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் நிறுவனத்தை அரவிந்தன் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் நிறுவனத்திற்கு விடுமுறை தினம் ஆகும். இதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம்போல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிறுவனத்தை திறந்துள்ளனர்.

ஊழியர்கள் முதல் தளத்துக்கு சென்று பார்த்தபோது, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சேதம் அடைந்திருப்பது குறித்து, உரிமையாளர் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் வந்து பார்த்த போது நிறுவனத்தின் முதல் தளத்தில் உள்ள ஜன்னலை உடைத்து, அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7½ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அரவிந்தன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News