செய்திகள்
சொர்ணாவூரில் நிவர் புயலால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

நிவர் புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி- கலெக்டர் ஆய்வு

Published On 2020-12-01 14:01 GMT   |   Update On 2020-12-01 14:01 GMT
விழுப்புரம் பகுதியில் நிவர் புயலால் சேதமடைந்த விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் சேதமடைந்த விவசாய பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு ஊராட்சி சொர்ணாவூர், கலிஞ்சிக்குப்பம் மற்றும் சேமங்கலம் ஆகிய பகுதிகளில் நிவர் புயலினால் சேதமடைந்த நெல், வாழை மற்றும் பப்பாளி ஆகிய பயிர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் சேதமடைந்த பயிர்களை விடுபடாமல் கணக்கெடுக்கும்படி வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து வீடூர் கிராமத்தில் நிவர் புயலினால் சேதமடைந்து நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் இந்திரா, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், திண்டிவனம் தாசில்தார் செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News