செய்திகள்
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்வு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள, ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட உள்ளது.
ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.