செய்திகள்
கைது

கோவில் உண்டியலை உடைத்து திருடிய ஓய்வுபெற்ற போலீஸ்காரர் கைது

Published On 2020-11-17 06:49 GMT   |   Update On 2020-11-17 06:49 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய ஓய்வுபெற்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கள்ளுப்பாளையம் அத்திப்பாளையம் பிரிவு ரோட்டில் முனியப்பன் கோவில் உள்ளது.

இங்கு பூசாரியாக லோகநாதன் என்பவர் உள்ளார். இந்த கோவிலில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சிலர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கோவிலுக்குள் நுழையும் மர்ம நபர் ஒருவர் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவை வைத்து விசாரித்ததில் திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ்காரர் ஆத்தியப்பன் (வயது 32) என்பது தெரிந்தது. இதையடுத்து ஊர் பெரியவர்கள் அத்தியப்பனை பிடித்து, திருச்செங்கோடு புறநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சவுமியா மேத்யூ அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓய்வுபெற்ற போலீஸ்காரரே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News