செய்திகள்
தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை- 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் ரூ.1000 அபராதம்

Published On 2020-11-13 02:44 GMT   |   Update On 2020-11-13 08:48 GMT
தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை:

காற்றுமாசு காரணமாக தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

எனவே இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் ஏற்கனவே எச்சரித்துள்ளார். இந்த நிலையில் அரசு நிர்ணயித்துள்ள 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ, அல்லது ரூ.1,000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த விதிமுறையை மீறுபவர்களை கண்காணிப்பதற்கு தீபாவளி அன்று போலீசார் ரோந்து பணி தீவிரமாக இருக்கும் என்று தெரிகிறது.

சென்னையில் கடந்த 2018-ம் ஆண்டு நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த குற்றத்துக்காக 2,168 பேர் மீதும், கடந்த 2019-ம் ஆண்டு 497 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News