செய்திகள்
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்த போது எடுத்த படம்

பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2020-11-10 02:51 GMT   |   Update On 2020-11-10 02:51 GMT
பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த விஷ்ணுவாக்கம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் முகேஷ் குமார் (வயது 24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நெல்லை மீனாட்சிபுரம், புளியந்தோப்பு, நடு தெருவை சேர்ந்த அபிராமி (24) அதே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது முகேஷ்குமாருக்கும், அபிராமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். அபிராமியின் காதலை அறிந்த அவரது பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதை அறிந்த அபிராமி தன்னுடைய காதலன் முகேஷ்குமாரிடம் சொல்லி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். கடந்த 3-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் கடந்த 6-ந்தேதி திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் அபிராமியின் தந்தை நெல்லை போலீஸ் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் காதல் ஜோடியை நெல்லைக்கு வரவேண்டும் என்று கூறி போன் மூலம் கூறியுள்ளனர்.

அங்கு சென்றால் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்காது என கருதிய காதல் ஜோடிநெல்லைக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த ஜோடியினர் நேற்று தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் மனு அளித்தனர். இதுசம்பந்தமான புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News