செய்திகள்
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி வீட்டில் ரூ.25 ஆயிரம் திருட்டு
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி வீட்டில் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி வீட்டில் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சேதுராஜ் (வயது 62). இவர் சுங்கத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 3-ந் தேதி சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்று விட்டார்.
நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சேதுராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு, பீராவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.