செய்திகள்
கைது

ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கடத்தல்- 2 பேர் கைது

Published On 2020-11-03 12:25 GMT   |   Update On 2020-11-03 12:25 GMT
போடியில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம்:

போடி பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் மூட்டைகளில் 6 டன் அரிசி மாவு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சின்னமனூரை சேர்ந்த போத்தி ராஜா (வயது 48), போடி புதூரை சேர்ந்த பீர் ஒலி (52) என்றும், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மூட்டைகளில் கடத்தி செல்வதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போடி புதூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் போடி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளில் அரிசியை விலைக்கு வாங்கி வந்து, பீர் ஒலிக்கு சொந்தமான மாவு மில்லில் மாவாக அரைத்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் ஒலி, போத்தி ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 6 டன் அரிசி மாவும், மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News