செய்திகள்
வடமதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை அருகே பெற்றோர் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் அனிதா (வயது 20). இவர் வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் கோப்பம்பட்டியை சேர்ந்த கணேசன் (25) என்பவரும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மணமக்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனிதாவின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என்று வடமதுரை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் தங்களை தேடுவதை அறிந்த காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று போலீசார் அனுப்பி வைத்தனர்.