செய்திகள்
சென்னைக்கு கடத்தப்பட்ட குட்காவையும், பறிமுதல் செய்யப்பட்ட வேனையும் படத்தில் காணலாம்.

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வேனில் கடத்திய ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் - டிரைவர் உள்பட 3 பேர் கைது

Published On 2020-11-02 01:10 GMT   |   Update On 2020-11-02 01:10 GMT
கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு வேனில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்காவை குருபரப்பள்ளி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
குருபரப்பள்ளி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் டிராவல்ஸ் வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 33 பெட்டிகளில் குட்கா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வேன் டிரைவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கெங்கேரியை சேர்ந்த மஞ்சுநாதா (வயது 23), பெங்களூரு நகரபாவி பகுதியை சேர்ந்த நாதுராம் (33), கம்மகுட்டா மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பொன்ராம் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் குட்காவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 33 பெட்டிகளில் இருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News