செய்திகள்
கோவில்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
கோவில்பட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த இடைசெவல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் (வயது 80). விவசாயி. சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இடைசெவலை அடுத்த சாய்பாபா கோவில் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த நம்பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், நம்பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.