செய்திகள்
கரூர் அருகே மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூர்-கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்:
கரூர்-கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் (மின் அரங்கம்) தனபால், நகர கோட்ட தலைவர் மதியழகன், துணைத்தலைவர்கள் கென்னடி, விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக ரூ.380 வழங்க வேண்டும். பகுதிநேர பணியாளர்கள் என அனைவரையும் பட்டியலில் உள்ளவாறு உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள், பகுதிநேர பணியாளர்கள் அனைவருக்கும் கருணைத்தொகை மற்றும் போனஸ் வழங்க வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 30 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.