செய்திகள்
கோப்பு படம்.

ஆத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி

Published On 2020-10-11 09:59 GMT   |   Update On 2020-10-11 09:59 GMT
ஆத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் உறவினர்கள் கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:

ஆத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் குணசேகரன் (வயது 20). இவர் இரவு நேரங்களில் காட்டுப்பகுதிக்கு சென்று முயல், காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குணசேகரன் தனது உறவினர்கள் சிலருடன் பைத்தூர் குடகு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு செந்தில்குமார் என்பவரது விவசாய நிலத்தை சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் குணசேகரன் சிக்கி அலறினார்.

அவரை அங்கிருந்து மீட்ட உறவினர்கள், உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குணசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மின் வேலியில் சிக்கி குணசேகரன் இறந்தது குறித்து, போலீசுக்கு தெரியாமல் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் குணசேகரன் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வாலிபர் குணசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முன்னுக்கு பின் முரணாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதில் சந்தேகமடைந்த போலீசார் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், குணசேகரன் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News