செய்திகள்
சென்னை ஐகோர்ட்

எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

Published On 2020-10-09 06:26 GMT   |   Update On 2020-10-09 06:26 GMT
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
சென்னை:

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆசைவார்த்தை கூறி கடத்தி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன்னை சிலர் மிரட்டுகிறார்கள். எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தம்மை யாரும் கடத்தவில்லை என்று மணப்பெண் சவுந்தர்யா வீடியோ வெளியிட்டார். மேலும் சவுந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்எல்ஏ பிரபுவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சாமிநாதன் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து நீதிமன்றத்தில் சவுந்தர்யா இன்று ஆஜரானார். தந்தையுடன் பேசிய பிறகு கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து சவுந்தர்யா கணவருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.

மேலும் சவுந்தர்யாவின் தந்தை தொடர்ந்தஆட்கொணர்வு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News