செய்திகள்
புதிய வேளாண் மசோதாவுக்கு ஆதரவு - நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மத்திய அரசு புதியதாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வேளாண் சட்ட மசோதாவை ஆதரித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நெல்லை:
மத்திய அரசு புதியதாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வேளாண் சட்ட மசோதாவை ஆதரித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தச்சை மண்டல தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் உடையார் முன்னிலை வகித்தார். தென் மண்டல செயலாளர் டி.கே.பி.ராஜா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் கொள்கை விவசாயிகளுக்கு நன்மை தருவதாக உள்ளது. இதனால் தான் இந்த கொள்கையை தமிழக அரசும் ஏற்றுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும் இந்த சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் இசக்கிபாண்டி, பாலா, இளையராஜா, கண்ணன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.