செய்திகள்
தார் சாலை அமைக்கும் பணி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்த காட்சியை படத்தில் காணலாம்

ரூ.65¾ லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு

Published On 2020-09-24 12:04 GMT   |   Update On 2020-09-24 12:04 GMT
ஆலங்குளம் அருகே ரூ.65¾ லட்சத்தில் நடந்து வரும் தார் சாலை பணிகளை, கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.9.08 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார். அங்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து மாயமான்குறிச்சி சந்திப்பு பகுதியில் இருந்து துத்திகுளம் வரை 2.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.65.85 லட்சம் மதிப்பில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார். சாலையின் உயரம், சாலை அமைப்பதற்காக போடப்பட்ட சிமெண்டு கலவையின் தரம், எடை ஆகியவற்றை சோதனை செய்தார்.

பின்னர் மாயமான்குறிச்சியில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளை பார்வையிட்டார். அங்கு வேலை செய்த பெண்களிடம் வேலை விவரங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து குருவன்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கம்பி வலை போடப்பட்ட ஆட்டு கொட்டகை, பசுமை வீடுகள் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், மழை நீர் சேகரிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் சரவணன், செயற்பொறியாளர் முருகன், ஆலங்குளம் ஆணையாளர் செல்வராஜ், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், உதவி செயற்பொறியாளர் பூச்செண்டு, ஒன்றிய பொறியாளர் முருகையா, மாயமான்குறிச்சி ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டி, அரசு ஒப்பந்ததாரர்கள் மாரிதுரை, பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News