செய்திகள்
கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-19 13:59 GMT   |   Update On 2020-09-19 13:59 GMT
கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான விவசாய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். 2016 முதல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

அனைத்து கூட்டுறவு சங்க வங்கிகளிலும் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும். விதை மற்றும் உரம், யூரியா போன்ற விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் லெனின், மாவட்ட துணைத்தலைவர் சிவராம், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஏ.ஐ.டி.யூ.சி பஞ்சாலை சங்க தலைவர் குருசாமி, பெருமாள்பட்டி பஞ்சாயத்து தலைவர் முரளிதரன், விவசாய சங்க எட்டயபுரம் தாலுகா தலைவர் ரவீந்திரன் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் விவசாய சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News