செய்திகள்
தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியது: கட்டிட பெண் தொழிலாளி பலி
தஞ்சை அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் கட்டிட பெண் தொழிலாளி இறந்தார். அவருடன் வந்த சக தொழிலாளி காயமடைந்தார்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சை மானோஜிப்பட்டி அருள்பிரகாசம் நகரை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (வயது30). நேற்றுமுன்தினம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற கட்டிட பணியில் தாமரைச்செல்வனும் மேலவஸ்தாசாவடி அருகே உள்ள கூத்தஞ்சேரியை சேர்ந்த துரைராஜ் மனைவி மலர்கொடி(49) என்பவரும் ஈடுபட்டனர். பணி முடிந்த உடன் தஞ்சைக்கு வர பஸ் வசதி இல்லாததால் தாமரைசெல்வன் அவருடைய ஸ்கூட்டரில் மலர்கொடியை ஏற்றிக்கொண்டு செங்கிப்பட்டியில் இருந்து தஞ்சை நோக்கி வந்தார். தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள ஆலக்குடி பாலம் அருகே ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்த போது பின்புறம் வந்த கார் தாரைச்செல்வன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் ஸ்கூட்டர் பாலத்தின் அருகில் இருந்த தோட்டத்துக்குள் பாய்ந்தது. காரும் தோட்டத்துக்குள் புகுந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட தாமரைசெல்வன், மலர்கொடி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி நேற்று இறந்தார். தாமரைசெல்வன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.