செய்திகள்
கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிக்காக தமிழக அரசு ரூ.1 கோடி அளவில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 10 முதல் 15 ஆண்டு வரை ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டு இருப்பின் ரூ.2 லட்சமும், 20 ஆண்டிற்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் அளிக்க வேண்டும்.
சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.b-c-m-b-c-mw@tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஆய்வு செய்து கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் மேற்படி திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.