செய்திகள்
தற்கொலை

ஆரணி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார்

Published On 2020-08-15 08:22 GMT   |   Update On 2020-08-15 08:22 GMT
ஆரணி அருகே இளம்பெண் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி:

சந்தவாசலை அடுத்த வேட்டகிரிபாளையம் பகுதியை சேர்ந்த வேலு - ரஹீதா தம்பதியரின் மகள் குமாரி (வயது 24) இவர் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் முதல் மனைவி அபிராமியின் நெருங்கிய உறவினர் ஆவார். அபிராமியை பிரிந்து குணசேகரன் மனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஆகாரம் கிராமத்தில் வசித்து வருகிறார். குணசேகரனின் குழந்தைகள் திவ்யா, நித்திகேஷ், பிறந்த 10 நாட்களான பெண்குழந்தை ஆகியோரை குமாரி உடனிருந்து கவனித்து வந்துள்ளார். குணசேகரன் குமாரிக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டதாகவும், தற்போது குமாரிக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குமாரிக்கும் குணசேகரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறி கொக்கியில் சட்டைகளை இணைத்து குமாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்காததால் கதவுகள் உடைக்கப்பட்டு குமாரியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து குமாரியின் பெற்றோர்களுக்கு குணசேகரன் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆரணி தாலுகா போலீசில் குமாரியின் தாய் ரஹீதா என் மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News