செய்திகள்
ஈசுவரன்

ராமநாதபுரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் - தாலுகா அலுவலக ஊழியர் கைது

Published On 2020-08-05 09:19 GMT   |   Update On 2020-08-05 09:19 GMT
ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய பெரியப்பா பூத்தோண்டி பகுதியை சேர்ந்த சோமு சமீபத்தில் இறந்துவிட்டார். இதனால் அவருடைய மனைவி சேது, உழவர் பாதுகாப்பு அட்டை திட்டத்தின்கீழ் ரூ.20 ஆயிரம் கணவருக்கான ஈமக்கிரிகை நிதி உதவி பெற விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தினை பரிசீலித்து முதுநிலை ஆய்வாளருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தனசேகரன், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் கேட்டபோது, இளநிலை வருவாய் ஆய்வாளர் ஈசுவரன் (வயது 29), விண்ணப்பத்தினை பரிசீலித்து அனுப்ப ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து தனசேகரன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர்.

லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, பீட்டர் உள்ளிட்டோர் 
தாலுகா அலுவலகத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தனர்.

தனசேகரனிடம் இருந்து ஈசுவரன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக மடக்கி அவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் ஈசுவரனிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கி ஊழியர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News